Thirukural

Sunday, 2 October 2011

இட ஓதுக்கீடு

இன்று ஒரு வார ஏட்டை படித்து கொண்டிருந்த போது கண்களில் பட்ட தலைப்பு "இட ஓதுக்கீடு". என்றுமே தொட்டவுடன் தாக்கும் மின்சாரம் போன்றது இந்த தலைப்பு. எதிர் பார்த்தது போலவே பின்னூட்டங்கள் பலரது மனகொதிப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதிலும் தமிழகத்தில் தான் 69 சதவீதம் என இருப்பதால் இங்கு தான் இக்கட்டும் மனக்குமுறல்களும் அதிகம்.

இரு தலைமுறைகள் கடந்த நிலையில் இது அவசியமா என்று நோக்கும் போது அல்லது சிந்திக்கும் போது பல விடயங்கள் தெளிவாகும். இத்திட்டம் செயல் படுத்தியபோது அதிகார மையங்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடத்தில் தானிருந்தது. இன்று அந்த நிலைமையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இக்கோரிக்கை எப்பொழுது துவங்கியது என்று பார்த்தால் விடுதலைக்கு முன்னரே இதற்கான அடிகோல் நடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் நலன் கருதியே அனைத்தும் செய்தாலும் நமது சமுதாய முன்னேற்றத்திற்க்கு அவற்றுள் பல பயன் ஈன்றுள்ளது. இதற்கு பல மேல்தட்டு மக்களும் ஆதரவாக செயல் பட்டு இருக்கிறார்கள்.

விடுதலை அடைந்த பின் பல கட்டங்களாக இந்த இட ஒதுக்கீடு பல சாதியினர்க்கும் பரப்பபட்டது. அதிலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அதிகமாக 69 சதவீதம் என கொணர பட்டது. பின்பு வன்னியர் சங்க போராட்டங்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு தமிழகத்தில் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது.அது பிற்படுத்த பட்ட பிரிவினரின் 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதத்தை தனியாக ஒதுக்கபட்டது. இந்தியாவிலே வேறெங்கும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் நடைமுறை படுத்தபட்டது.

சரி நிகழ்காலத்திற்கு வருவோம். இத்திட்டத்தினால் அனைத்து மட்டங்களிலும் தரம் மலிந்து விட்டதாக அதை எதிர்போர்களால் குறையாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வினில் மாற்றம் கொண்டு வந்தது. இன்று அவர்களும் பல துறைகளிலும் பன்முனை போட்டியை உருவாக்கியுள்ளார்கள். இது சமுதாயத்திற்கு நன்மையை பயக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால் முழுமையான மாற்றம் இன்னும் நிகழவில்லை. அதற்கு இன்னும் இருபது வருடங்களும் ஆகலாம் அல்லது நாற்பது வருடங்களும் ஆகலாம். இது தாமதம் ஆக ஆக மற்ற கிளை பிரச்சினைகளை உருவாக்கலாம்.
அரசியல் காரணங்களுக்காக உயர் சாதி மன மாச்சரீயங்களை விதைத்து வருகிறார்கள்,அதிலும் குறிப்பாக பிராமன எதிர்ப்பு. அதற்கான பின் புலங்களை ஆராயமல் விளைவுகளை பற்றி மட்டும் யோசித்தால் இது சமுதாய நலனிற்கு கேடாகவே அமையும். இது எந்நாளும் சாதிய ஒழிப்புக்கு துணை புரியாது. அது ஏன்னென்று பின்னர் பார்ப்போம்

சில திரைபடங்களில் சாதிய ஒழிப்பு பற்றி சுவையான காட்சிபடுத்தல்களை காணலாம். சில அட என்று சொல்ல வைக்கும் வகையை சார்ந்தவை. "சாதி இல்ல இல்லன்னு சொல்றீங்க,அப்புறம் ஏன்டா பள்ளிகூடத்துல சேர்க்கும் போது என்ன சாதின்னு கேக்குறீங்க. அப்புறம் எப்பிடிடா சாதி ஒழியும்". மேலோட்டமாக பார்க்கும்போது அட இது சரிதானேன்னு தோன்றும். ஆனால் சமத்துவமான சமுதாயம் உருவாகாமல் சாதியை ஒழித்து சாதிக்க போவது ஒன்றும் இல்லை.

இன்னும் ஒரு கூற்று எதிர்ப்பாளர்களால் முன்வைக்கபடுகின்றது. அது ஏற்கனவே இச்சலுகைகளால் பயன்பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பயன் பெறுகிறார்கள். ஏழைகள் முழுமையான பயன் பெறுவதில்லை என்பதாகும். இக்கருத்தை முழுமையாக புறக்கணிக்க இயலாது. அது போல உயர் சாதியிலும் அடிமட்ட நிலையில் உள்ளவர்கள் இதனால் பாதிக்கபடுவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவை இந்த சமுதாய மலர்ச்சிக்கு தீட்டப்பட்டுள்ள திட்டத்தின் சாதக பாதக அம்சம்கள்.

ஆனால் இக்குறைகளினால் இத்திட்டத்தின் மாண்புகளை மறுத்தல் கூடாது. குறைகளை நீக்குவதுதான் புத்திசாலித்தனமே அன்றி அதை புறம் தள்ளுதல் கூடாது. இத்தகைய சமூகத்தில் சமத்துவ நிலை உருவாவதை யாராலும் தடுக்க இயலாது. ஆனால் அதை தாமதப்படுத்த இயலும். இத்தகைய தாமதத்தினால் பாதிக்கபடுவது இருதரப்பினரும் தான். அரசு இயந்திரங்களால் மட்டும் இதை சாதிக்க முடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சாதிய இயக்கங்களும் துணை புரியவேண்டும். சாதீய சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக இதை செய்யும் சாத்திய கூறுகள் குறைவு. அதற்கான அழுத்தம் கண்டிப்பாக அவர்கள் மேல் திணிக்கபடவேண்டும். இது ஊடகத்துறை,சட்டதுறை,காவல்துறை என அனைவரும் கைகோர்த்து விழிப்புனர்ச்சி கொணர வேண்டும்.

இந்த குறைகளை நீக்க வேறொறு வழிமுறையாய் பொருளதார அடிப்படையில் சலுகை வழங்க ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் இது இருக்கும் குறையை போக்காமல் வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கும். எடுத்துக்காட்டாக நமது நாட்டில் பொருளாதார அடிப்படையை தீர்மானிக்க சரியான முறை ஒன்றும் இல்லை. அதிலும் வருமானவரி ஏய்பு அதிகமாக நிகழும் நாடு.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இலக்கை அடைந்தவுடன் இதை எவ்வாறு பயன்பாட்டில் இருந்து நீக்குவது என்பதுதான்.எப்படி இப்பொழுது மேல்தட்டு மக்களுக்கு அனுபவித்து வரும் சுகங்களை இழக்க மனம் வரவில்லையோ அது போல் புதிய சுகத்தை அனுபவிக்கும் கீழ்த்தட்டு மக்கள் அச்சுகத்தை இழக்க மனம் வராமல் முரண்டு செய்வார்கள். இதை அதிகார வர்க்கம் தான் செய்ய வேண்டும்.

பின்னர் பார்ப்போம் என்று மேலே கூறியது பற்றி இப்போது பார்ப்போம்.ஜாதி மனமாச்சரியங்களை வளர்ப்பதால் அவர் அவர் அவர்கள் சாதியை பேணிகாக்கும் செயலில் தான் அதிகம் நாட்டம் செலுத்துவர்.சமத்துவத்திற்கு ஆதரவு வருவது குறையும். எனவே உண்மையாக கீழ் தட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை நிறுத்துதல் அவசியம்.

No comments:

Post a Comment

Ratings and Recommendations by outbrain